Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை
X

இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியை உலகுக்குக் காட்டிய ஒரு முக்கியத் தருணம். நேருவின் மகள் என்பது முக்கியமான காரணம் என்றாலும் நாட்டின் உயரிய பதவி இந்திராவுக்கு தங்கத் தட்டில் வைத்து எளிதாகக் கொடுக்கப்பட்டதல்ல.

பிரதமர் பதவிக்குப் போட்டி

இந்திய அரசியல் வரலாற்றில் 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்று நாட்டை வழிநடத்தி வந்த லால் பகதூர் சாஸ்திரியின் எதிர்பாரா மரணம், "இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?" என்ற பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஜவாஹர்லால் நேருவின் நிழலிலேயே வளர்ந்த இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.

சாஸ்திரியின் மறைவுக்குப் பின் பிரதமர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய் ஒருபுறமும், இந்திரா காந்தி மறுபுறமும் நின்றனர். சாஸ்திரியின் மறைவுக்குப் பின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்ற குல்சாரிலால் நந்தாவும் பிரதமர் பதவியில் நீடிக்க விரும்பினார். அன்றைய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான காமராஜர் இந்திரா காந்தியே பிரதமராக வேண்டும் என்று விரும்பினார். நேருவின் கொள்கைகளைத் தொடரவும், கட்சிக்குள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் இந்திரா பொருத்தமானவர் என அவர் கருதினார். நேருவின் மகள் என்பதால் இந்தியா முழுவதும அறியப்பட்டவராக இருந்ததும் இந்திராவுக்கு சாதகமான அம்சமாக இருந்தது.

இரு மடங்கு பெரும்பான்மை

இந்திரா பிரதமராகத் தேர்வு செய்யப்படுவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க காமராஜர் முயன்றார். பொதுவாக எம்.பி-க்களே பிரதமரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் என்றாலும், 16 மாநிலங்களில் 11 மாநில முதல்வர்களின் ஆதரவை இந்திராவுக்குத் திரட்டினார். பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் மாநில முதல்வர்களுக்குப் பங்கு கிடையாது" என்று தேசாய் வாதிட்டபோது, "கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்" என்று காமராஜர் பதிலடி கொடுத்தார். இதையடுத்து நந்தா பிரதமர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனால் தேசாய் பின்வாங்கவில்லை. எனவே பிரதமரைத் தேர்வு செய்வதற்கு வாக்கெடுப்பு அவசியமானது.

1966 ஜனவரி 19 அன்று நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவரே பிரதமராக பொறுப்பேற்க முடியும். காங்கிரஸ் கட்சியின் 526 எம்பிக்களில் 355 பேர் இந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தேசாய்க்கு ஆதரவாக 169 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தன. சுமார் 68 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி தன்னை ஒரு வலிமையான தலைவராக நிலைநிறுத்திக் கொண்டார்.

பெண்களின் வெற்றி

இந்திராவின் வெற்றி அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற வளாகம் வெற்றி முழக்கங்களால் அதிர்ந்தது. வெள்ளை நிறப் புடவையும், பழுப்பு நிற சால்வையும் அணிந்திருந்த இந்திரா காந்தி, வெற்றிக்குப் பின் மொரார்ஜி தேசாயிடம் சென்று கைகுலுக்கி தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.

அன்றைய சோவியத் செய்தி நிறுவனமான 'டாஸ்' (Tass) இந்தச் செய்தியை உலகுக்கு முதலில் அறிவித்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான லார்ட் மவுண்ட் பேட்டன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்வு செய்ய்யப்பட்டதால் இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என வாழ்த்தினர்.

பல முன்னேறிய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெறுவதற்கே பெரும் பொராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்தியாவிலோ சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் தேர்தலிலேயே வாக்களிக்கும் வயதை அடைந்த அனைத்து பாலினத்தவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது,. இந்தப் பின்னணியில் நேருவின் மகள் என்றாலும் இந்தியாவின் பிரதமராக ஒரு பெண் தேர்வுசெய்யப்பட்டதை நாடு முழுவதும் உள்ள மகளிள் அமைப்புகள் பெரிதும் கொண்டாடின. சாமானியப் பெண்களும் உற்சாகம் அடைந்தனர்.

அரசியல் எதிரியின் வாழ்த்து

எல்லாவற்றுக்கும் மேலாக நேருவுடன் முரண்பட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியிருந்த முதறிஞர் ராஜாஜி இந்திரா காந்தி பிரதமரானதை மனதார வரவேற்றார். "நேருவின் பெயரால் மட்டும் இந்திராவுக்கு இந்த வெற்றி கிடைக்கவில்லை; இந்தியாவின் நல்வாய்ப்பாலேயே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" எனப் புகழ்ந்தார். "இந்திரா ஒரு புதிய ஆற்றல், அவர் நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்வார்" என ராஜாஜி நம்பிக்கை தெரிவித்தார். அன்று காங்கிரஸை தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருந்த ராஜாஜியிடமிருந்து வந்த பாராட்டு, இந்திராவின் தலைமைத்துவத்துக்கு அங்கீகாரமாக அமைந்தது.

1966 ஜனவரி 24 அன்று 48 வயதில் இந்திரா காந்தி முறைப்படி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். நேருவின் மகளாகத் தனது பயணத்தைத் தொடங்கினாலும், கட்சியின் மூத்த தலைவரிடமிருந்து எழுந்த போட்டியை முறியடித்து வெற்றிபெற்றது இந்திரா வெறும் வாரிசு அரசியலர் அல்ல என்பதை உணர்த்தியது, பிற்காலத்தில் இந்தியாவின் ‘இரும்புப் பெண்மணி" என்று அவர் அழைக்கப்படுவதற்கான தொடக்கமாக இது அமைந்தது.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it