Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

தூக்கத்தைப் புரிந்துகொள்வோம்!

நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்துக்காகவே செலவிடுகிறோம். ஆனால், தூக்கம் என்பது முழுவதுமாகப் புரியாத புதிராகவே இருக்கிறது.

தூக்கத்தைப் புரிந்துகொள்வோம்!
X

இரவில் படுக்கச் சென்ற அரை மணி நேரத்தில் நீங்கள் தூங்கிவிடுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்குத் தூக்கப் பிரச்சினை இல்லை என்று மகிழ்ச்சி அடையலாம். ஆனால், இன்றைய புத்தியல்பு வாழ்க்கைமுறையில் தினமும் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் துன்பப்படுகிறவர்கள்தான் அதிகம்.

தூக்கத்தின் அவசியம்

நாம் பகலில் உழைத்துக் களைத்த பிறகு இரவில் நம் உடலும் மனமும் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நிலைதான் தூக்கம். இது ஒரு பொதுவான கருத்து. நம் அன்றாடப் பணிகள் சீராக அமையவும், நம் பொது ஆரோக்கியம் காக்கப்படவும் நிறைவான தூக்கம் தினமும் தேவை. ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினால் நல்லது. ஒன்றிரண்டு நாள்களுக்குத் தூக்கம் குறைந்தால் தவறல்ல. அந்த இழப்பை உடல் ஈடுசெய்துகொள்ளும். தினமும் தூக்கம் குறைவது தொடருமானால் உடலும் மனமும் பாதிக்கப்படும். அப்போது பருவ மழைக்குப் பிறகு முளைக்கும் காளான்கள்போல் ஆரோக்கியப் பிரச்சினைகள் அடுத்தடுத்து ஆரம்பிக்கும்.

என்னென்ன பிரச்சினைகள்?

வழக்கமான சுறுசுறுப்பு குறையும். உடல் சோர்வடையும். மனச்சோர்வு ஏற்படும். காரணம் இல்லாமல் எரிச்சல் வரும். பொறுமை பறிபோகும். கோபம் கொப்பளிக்கும். கவனம் சிதறும். பணியில் தவறுகள் அதிகமாகும். வழக்கமான பணிகளைச் செய்துமுடிக்கக் கூடுதல் நேரம் தேவைப்படும். பணித் திறன் குறையும். மறதி ஏற்படும். பகல் தூக்கம் அதிகமாகும். பசி குறையும். கண் எரிச்சல், தலைவலி, வயிற்றில் எரிச்சல், குறுமயக்கம்… இப்படிப் பலவும் தொல்லை தரும். நாள்பட நாள்பட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். ஹார்மோன்கள் சுரப்பது குறையும். ரத்த ஓட்டம் குறையும். ரத்த அழுத்தம் உயரும். இதயத்துக்குப் பாதிப்பு ஏற்படும்.

தூக்க மாத்திரையைத் தேடி

தூக்கம் குறைந்தவர்கள் தங்கள் பிரச்சினையைச் சரிசெய்ய முதலில் நாடுவது தூக்க மாத்திரைகளைத்தான். பயனாளர்கள் மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரைகளைக் கேட்டு நிற்கும் கூட்டத்தைப் பல ஊர்களில் பார்க்கலாம். “மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தூக்க மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது” என்று சுகாதாரத் துறை இப்போது கடுமை காட்டுவதால் தூக்க மாத்திரைகளை முன்புபோல் கடைகளில் அவர்களாகவே வாங்கிப் பயன்படுத்துவது குறைந்துவருகிறது. அதேசமயம் அவர்களில் சிலர் தூக்கம் வருவதற்கு மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற போதை தரும் மாற்று வழிகளைத் தேடுவதையும் பார்க்க முடிகிறது.

தூக்கம் குறைவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சிலருக்கு மனம் சார்ந்த காரணமாக இருக்கலாம். பலருக்கு உடல்சார்ந்த காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்களைக் களைந்தால்தான் தூக்கப் பிரச்சினை சரியாகும்.

அடுத்து, தூக்க மாத்திரைகளில் பல வகை உண்டு. ஒவ்வொரு மாத்திரைக்கும் குறிப்பிட்ட அளவு உண்டு. பயனாளியின் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்துச் சரியான அளவில் இவற்றைப் பயன்படுத்தினால்தான் விரும்பிய பலன் கிடைக்கும்.

ஆகவே, தூக்கம் குறித்த அடிப்படை அறிவியலைக் கொஞ்சமாவது தெரிந்துகொள்வது நல்லது.

தூக்கத்தைப் புரிந்துகொள்வோம்!

நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்துக்காகவே செலவிடுகிறோம். ஆனால், தூக்கம் என்பது முழுவதுமாகப் புரியாத புதிராகவே இருக்கிறது. அதேசமயம், ‘ஏன் தூங்குகிறோம்?’ என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ள நவீன அறிவியல் தொடர்ந்து முயற்சித்துவருகிறது. தற்போதைக்குப் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளையும் தனிப்பட்ட விஞ்ஞானிகளின் கோட்பாடுகளையும் அடிப்படையாக வைத்துத் தூக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

எத்தனை சாலைகள் என்றாலும் முடிகிற இடம் ஒன்றுதான் என்பதுபோல எத்தனை ஆராய்ச்சிகள் என்றாலும் அவை எல்லாமே “நாம் விழித்திருக்கும்போது நன்றாகச் செயல்படுவதற்குப் போதுமான அளவுக்குத் தரமான தூக்கம் அவசியம்” எனும் ஒற்றைக் கருத்தையே அதிகமாக வலியுறுத்துகின்றன.

தூக்கம் என்றால் என்ன?

“தூக்கம் என்றால் என்ன?” என்று அறிவியல்ரீதியாக வரையறை செய்வது கடினம். ஆனாலும், மருத்துவத்துறையில் 1834இ ல் ராபர்ட் மெக்நிஷ் (Robert McNish) எனும் விஞ்ஞானி சொன்ன வரையறைதான் இன்றைக்கும் பிரபலம்: “தூக்கம் என்பது விழிப்பு நிலைக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. விழிப்புநிலை என்பது எல்லா உடல்சார் செயல்பாடுகளும் அறிவுசார் செயல்பாடுகளும் இயக்கத்தில் இருக்கிற நிலை. மரணம் என்பது இவை அனைத்தும் முற்றிலும் நின்றுபோன நிலை.”


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it