Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
3 நிமிட வாசிப்பு

மினியாபோலிஸ் எழுச்சி: எதேச்சாதிகாரத்தை பணிய வைத்த மக்கள் சக்தி

ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கையின் பெயரிலான அடக்குமுறைகளை மினியாபோலிஸ் மக்கள் முறியடித்துள்ளனர்.

மினியாபோலிஸ் எழுச்சி: எதேச்சாதிகாரத்தை பணிய வைத்த மக்கள் சக்தி
X

உலக நாடுகளை எந்நேரமும் கலக்கத்தில் வைத்திருக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, அவரது ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிறிய நகரத்து மக்கள் பின்வாங்க வைத்திருக்கிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகளை அகற்றுவதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் நிர்வாகம் நிகழ்த்தி வந்த ஒடுக்குமுறைகளை, மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகர மக்கள் தங்களது நெஞ்சுரம் மிக்க போராட்டங்களால் நிறுத்தவைத்துள்ளனர். எவ்வளவு பெரிய அதிகாரத்தைவிடவும் மக்கள் சக்தியே மகத்தானது என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

குறிவைக்கப்பட்ட நகரம்

டொனால்டு ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும், சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து வெளியேற்ற 'மெட்ரோ சர்ஜ்' (Operation Metro Surge) என்ற திட்டத்தை அறிவித்தார். மினியாபோலிஸ் நகரம் தொன்றுதொட்டே குடியேறிகளை அரவணைக்கும் போக்கைக் கொண்டது. இந்தக் காரணத்தால், ட்ரம்ப்பின் மெட்ரோ சர்ஜ் நடவடிக்கைகளில் இந்நகரம் முதன்மையாகக் குறிவைக்கப்பட்டது.

குடியேற்றப் பிரிவைச் சேர்ந்த (ICE) ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மினியாபோலிஸில் குவிக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், முகமூடி அணிந்த ஏஜென்ட்டுகள், ட்ரோன் கண்காணிப்பு என அந்த நகரே ஒரு ராணுவக் கட்டுப்பாட்டு மண்டலம் போல மாற்றப்பட்டது. தொடக்கத்தில் குடியேற்றப் படைவீரர்களின் கெடுபிடிகளுக்கு மினியாபோலிஸ் மக்கள் அமைதியான முறையில்தான் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், அதிகார வர்க்கம் நிகழ்த்திய இரண்டு கொலைகள் மக்களை வெகுண்டெழச் செய்தன.

வெகுண்டெழச் செய்த கொலைகள்

ஜனவரி 7 அன்று, மத்தியப் படை அதிகாரிகள் ஒரு குடியேறியின் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, அதைத் தனது காரில் அமர்ந்தபடி கண்காணித்த எழுத்தாளரும் மூன்று குழந்தைகளின் தாயுமான ரெனீ குட், எவ்விதத் தூண்டுதலும் இன்றி அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டிக்கும் விதமாக ஜனவரி 24 அன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணை அதிகாரிகள் கீழே தள்ளிவிட்டனர். அதனால் மயங்கி விழுந்த அந்தப் பெண்ணுக்கு உதவ முயன்ற மருத்துவமனை ஊழியர் அலெக்ஸ் ப்ரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு முன்னதாக, ஜனவரி 23 அன்று அமெரிக்க வரலாற்றிலேயே 80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு பிரம்மாண்டமான பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

2020இல் ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டபோது ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தவர்கள் மினியாபோலிஸ் மக்கள். அந்த அனுபவத்தால், அவர்கள் இம்முறை மிக வலிமையாக ஒருங்கிணைந்தனர். மிகக்கடுமையான உறையும் பனிப்பொழிவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். உணவகங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாறின; மக்கள் ஒருவருக்கொருவர் உணவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

மத்தியப் படைகள் தங்கியிருந்த இடங்களை மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் செல்வதைத் தடுத்து, அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

ட்ரம்ப் அரசின் பின்வாங்கல்

மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தால், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு பெரிய பின்வாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதானது. குடியேற்றப் பிரிவுத் தலைவர் கிரிகோரி போவினோ நகரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மினியாபோலிஸ் நகரிலிருந்து குடியேற்றப் பிரிவுப் படைகள் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மினியாபோலிஸ் எழுச்சி என்பது வெறும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அதன் மக்களிடமே உள்ளது என்பதை உணர்த்திய ஜனநாயகப் போர். "அரசாங்கம் என்பது மக்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது" என்ற அடிப்படை உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது மினியாபோலிஸ்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it