மீண்டும் இனப்பாகுபாட்டை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்க இந்தியர்கள்
160 ஆண்டுகளுக்கு மேல் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தாலும், இந்தியர்கள் ‘தென்னாப்பிரிக்கர்கள்’ என அங்கீகரிக்கப்படுவதில்லை; அந்நியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
தென்னாப்பிரிக்கவாழ் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனப் பாகுபாடும் இனவெறித் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயக ஆட்சி மலர்ந்துவிட்டபோதிலும், அங்கு வாழும் 15 லட்சம் இந்திய வம்சாவளியினர் தற்போது மீண்டும் இனப்பாகுபாடுகளைச் இனவெறித் தாக்குதல்களையும் எதிர்கொண்டுவருகின்றனர். விமானங்கள், ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆப்பிரிக்கர்கள் இந்திய வம்சாவளியினரை அவமதிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. மேலும், இந்திய வம்சாவளியினரை "தாய்நாட்டுக்குத் திரும்பிப் போ" என்று விரட்டும் ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிறது. சமீபகாலமாக, டிக்டாக் மற்றும் எக்ஸ் தளங்களில் இந்தியப் பெண்களை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதும் ஒரு தொடர்கதையாகி உள்ளது. 2024-25 ஆண்டுகளில் வெளியான பல காணொளிகளில், பொது இடங்களில் இந்திய வம்சாவளியினரை வழிமறித்து அவர்களின் அடையாளத்தைக் கேள்வி கேட்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள்
1860களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வர்த்தகர்களாகவும் தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியர்கள், அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர். வழக்கறிஞர் பணிக்காக ஓராண்டு ஒப்பந்தத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுத்ததால், அந்நாட்டில் 21 ஆண்டுகள் தங்க நேர்ந்தது. காந்தியின் தலைமையில் பல்வேறு தென்னாப்பிரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போரிட்டனர்.
1931இல் தென்னாப்பிரிக்காவுக்கு பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டாலும், வெள்ளை இன மக்களின் ஆதிக்கமும் இன ஒதுக்கல் கொள்கையும் நீண்ட காலம் தொடர்ந்தது. கறுப்பின மக்களைப் போலவே இந்தியர்களும் இனவெறிப் பாகுபாடுகளுக்கு ஆளாகினர். தென்னாப்பிரிக்க அரசின் இன ஒதுக்கல் (Apartheid) கொள்கைக்கு எதிரான போராட்டத்திலும் இந்தியர்கள் முக்கியப் பங்காற்றினர். தென்னாப்பிரிக்கா பின்பற்றிய இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்து, அதனுடனான வர்த்தக உறவைத் துண்டித்துக்கொண்ட முதல் நாடு இந்தியாவாகும்; பிற நாடுகள் பின்னரே இந்தியாவைப் பின்பற்றின.
ஜனநாயக யுகத்தில் பாகுபாடு
நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் போராட்டத்தின் பயனால் 1994இல் தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. முன்னதாக இன ஒதுக்கலுக்கு எதிராக மண்டேலா ஒருங்கிணைத்த போராட்டங்களில் இந்திய வம்சாவளியினர் பலர் முக்கியப் பங்கு வகித்தனர். 1994இல் முதல் முறையாக அனைத்து இன மக்களுக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட தேர்தல் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார் மண்டேலா. அவர் தலைமையிலான அமைச்சரவையில் கணிசமான இந்தியர்கள் இடம்பெற்றனர். அதற்குப் பிந்தைய அமைச்சரவைகளில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது. தற்போதைய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே அமைச்சராக உள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் தங்களைப் போன்ற சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான இனவெறித் தாக்குதல்களும் வன்முறையும் தொடர்வதாகத் தென்னாப்பிரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் தெரிவிக்கின்றனர். 2021இல் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்குப் பின்பு நடைபெற்ற போராட்டங்களின்போது, இந்தியர்களுக்கு எதிரான வன்முறை உச்சம் தொட்டது. தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இனங்களுக்கு இடையே அவநம்பிக்கையும் பதற்றமும் எப்போதும் இருந்துவந்துள்ளதே இந்த வெறுப்புக்கும் வன்முறைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.
வெறுப்பை வளர்க்கும் அரசியல்
இந்தப் பதற்றத்தைச் சில அரசியல் கட்சிகள் மேலும் தூண்டிவிடுகின்றன. தென்னாப்பிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான பொருளாதார சுதந்திரப் போராளிகள் (EFF) கட்சியின் தலைவர் ஜூலியஸ் மலேமா போன்றோர், இந்திய வம்சாவளியினருக்கு எதிராக இனவெறிப் பேச்சுகளைத் தூண்டுவதாகப் பலமுறை குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்தியர்கள் கறுப்பின மக்களைச் சுரண்டுவதாகவும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பறித்துக்கொள்வதாகவும் மலேமா தொடர்ந்து விமர்சித்துவருகிறார். ஜேக்கப் ஜுமாவின் கட்சியின் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போதைய ஆளும் கட்சி, இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டவில்லை என்றாலும், தாக்குதல்களைத் தடுப்பதில் போதுமான முனைப்பு காட்டவில்லை என்ற விமர்சனம் உள்ளது.
அடையாளச் சிக்கல்
160 ஆண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தாலும், இன்றும் இந்தியர்கள் ‘தென்னாப்பிரிக்கர்கள்’ என முழுமையாக அங்கீகரிக்கப்படுவதில்லை; அந்நியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். "நாங்கள் இந்தியாவுக்குச் சென்றால் எங்களை அவர்கள் தென்னாப்பிரிக்கர்கள் என்கிறார்கள்; இங்கே நாங்கள் இந்தியர்களாகப் பார்க்கப்படுகிறோம்" என்பதுதான் அந்த மக்களின் மிகப் பெரிய வேதனையாகும். இதுபோன்ற ஒரு சூழலை எதிர்க்க அங்கே காந்தி போன்றோ நெல்சன் மண்டேலா போன்றோ ஒரு தலைவர் இல்லை என்பது பெரிய வெற்றிடமாகும்.

