தங்கம், வெள்ளி: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்
வரலாறு காணாத விலையேற்றத்தின் பின்னணி...

கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் விலை 125 சதவீதமும் வெள்ளி விலை 325 சதவீதமும் உயர்ந்துள்ளது.
அதாவது, 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தங்கம் சவரனுக்கு ரூ.60,000 ஆக இருந்தது. இப்போது ரூ.1.34 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஒரே ஆண்டில் ஒரு கிராம் ரூ.7,500இலிருந்து ரூ.16,800 ஆக உச்சம் தொட்டுள்ளது.
வெள்ளி விலை அப்போது கிலோ ரூ.1 லட்சமாக இருந்தது. இப்போது 4.25 லட்சத்தைத் தொட்டுள்ளது. ஒரே ஆண்டில் கிராம் ரூ.100இலிருந்து ரூ.425 ஆக உச்சம் தொட்டுள்ளது.
ஏன் முன்னெப்போதும் இல்லாத அளவில் தங்கமும் வெள்ளியும் இவ்வளவு வேகமாக உயர்ந்துவருகின்றன?
சர்தேச அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளே இவற்றின் விலையைத் தீர்மானிக்கின்றன.
எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வு காணும்.
ஏனென்றால், இத்தகைய பதற்றமான சூழலில் முதலீட்டாளர்கள் தங்கள் வசமுள்ள பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். தங்கம் எப்போதும் ஒரு 'பாதுகாப்பான புகலிடமாக' (Safe Haven) கருதப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டைக் குவிக்கின்றனர்.
தற்போதைய ஏற்றத்துக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன.
ட்ரம்ப் தாக்கம்
2025இல் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் உலகச் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகள் மீதான இறக்குமதி வரியை அவர் உயர்த்தியது, உலக அளவில் ஒரு வர்த்தகப் போருக்கான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
வரி விதிப்போடு மட்டும் நிற்காமல், வெனிசுலா அதிபர் மதுரோவை கைதுசெய்தது, கியூபாவுக்கான எச்சரிக்கை, கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சி, ஈரானுக்குப் போர்க்கப்பல்களை அனுப்பியது என ட்ரம்ப்பின் நகர்வுகள் சர்வதேச அரசியல் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்துவருவது கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விலை உயர்வு 1979ஆம் ஆண்டு நிலவிய சூழலுடன் ஒப்பிடப்படுகிறது. அன்று ஈரான் புரட்சி மற்றும் சோவியத் படையெடுப்பு போன்ற காரணங்களால் ஒரே ஆண்டில் தங்கம் 120 சதவீதமும், வெள்ளி 700 சதவீதமும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கிகளின் தங்க வேட்டை
உலக நாடுகள் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்துவருகின்றன. இதற்கு மாற்றாகப் பாதுகாப்பான 'தங்கத்தை' தங்கள் கையிருப்பில் சேர்த்து வருகின்றன.
உலகின் மிகப் பெரிய நுகர்வோரான சீனா, சுமார் 2,300 டன்களுக்கு மேல் தங்கம் கையிருப்பைக் கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியும் தனது கையிருப்பைத் தீவிரமாக உயர்த்திவருகிறது. தற்போது இந்தியா வசம் 880 டன் தங்கம் உள்ளது. டாலரின் மதிப்பு சரிந்தாலும் தங்கம் கைவிடாது என்ற நம்பிக்கையில் மத்திய வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான நிறுவனங்கள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகிறது.
மாறும் மனநிலை
இந்தியர்களைப் பொறுத்தவரையில் தங்கம் என்பது ஒரு கலாச்சார அடையாளமாகவும், முதலீட்டுப் பண்டமாகவும் உள்ளது.
பெண்களின் திருமணத்துக்காக தங்கம் சேர்க்கும் சாமானிய மக்கள் விலை ஏற்றத்தால் தடுமாறிப் போய் நிற்கிறார்கள்.
அதேசமயம், தங்கத்தை ஒரு 'ஆபரணமாக' பார்ப்பதைத் தாண்டி, ஒரு 'முதன்மையான முதலீடாக' அணுகும் போக்கும் தீவிரமடைந்து வருகிறது. இதன் விளைவாக, ஆபரணங்களாக வாங்குவதைத் தவிர்த்து, சேதாரம் இல்லாத தங்கக் கட்டிகள், டிஜிட்டல் தங்கம் மற்றும் இடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்வது வேகம் எடுத்துள்ளது.
எதிர்பாராத வெள்ளி
வெள்ளி இவ்வளவு உச்சத்துக்குப் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உலக அளவில் 60 சதவீதக்கு மேல் வெள்ளி தொழில் பயன்பாட்டுக்கே தேவைப்படுகிறது. தற்போது உலகம் மின்வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் தரவு மையங்களை நோக்கி மிக வேகமாக நகர்ந்துவரும் நிலையில், வெள்ளியின் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதில் இன்னொரு சுவாரசியமான மாற்றமும் நடக்கிறது; தங்கம் விலை எட்டாத உயரத்துக்குச் செல்வதால், நடுத்தர மக்கள் தங்கத்துக்கு நிகரான ஒரு முதலீட்டுப் பண்டமாக வெள்ளியைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச அரசியல், பொருளாதார பதற்றங்களும், மத்திய வங்கிகளின் அதிரடி நகர்வுகளாலும், தொழில் துறை தேவை அதிகரிப்பாலும் தங்கம், வெள்ளி வரும் நாட்களிலும் புதிய உச்சம் தொடும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.


