புள்ளிவிவரங்கள் ஏன் புனிதமானவை?
தவறான கணிப்பு பலவகைகளிலும் நாட்டின் பொதுநலத் திட்டங்களை வழிதவறிப் போகச் செய்துவிடும்.

இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியன் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது தனிப்பட்ட குடும்பக் கடமைகள் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில், அவர் பணிபுரிந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்காக எழுதிய கட்டுரையில், இந்தியாவின் பொருளாதார அளவீடுகள் 2.5% வரை அதீதமாகக் காட்டப்படுகின்றன என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். அது இந்தியப் பொருளியல் தளங்களில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியது
2014இல் பதவிக்கு வந்த அரசு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை கணித்திட, புதிய சூத்திரங்களை உருவாக்கியது. இந்தப் புதிய அணுகுமுறையில், 2011 முதல் 2017 வரையிலான பொருளாதார வளர்ச்சி, சராசரியாக 7% என இந்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது 4.5%தான் என அரவிந்த் சுப்ரமணியன், தான் எழுதியிருந்த கட்டுரையில் கூறியிருந்தார்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான அருண் குமாரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்தப் பொருளாதாரக் கணிப்பில் மிகவும் முக்கியமான தவறு என்பது, முறைசாராத் துறையின் வளர்ச்சியைக் கணித்தல் என்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சியும் தரவுகளும்
ஒரு காலத்தில், முறைசார் துறை, முறை சாராத்துறை இவையிரண்டுமே ஒரே திசையில், ஒத்திசைந்து பயணித்தன. ஆனால், பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி வரிகள், மற்றும் கொரொனா என்னும் மூன்று பெரும் நகர்வுகள் முறைசாராத் துறையைப் பெருமளவு பாதித்துவிட, முறைசாராத் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் விளைவாக ஊரகப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பின்மை பெருமளவு அதிகரித்துவிட்டது. ஊரக ஊதிய மேம்பாடுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு தரவுகளும் அரசு சொல்லும் வேகப் பொருளாதார வளர்ச்சி என்னும் தரவுகளுக்கு மாறாக இருக்கின்றன என்கிறார் பேராசிரியர் அருண் குமார்.
அதே போல பணவீக்கத்தை கணக்கிட, மொத்த விலை இண்டெக்ஸை (wholesale price index) எடுத்துக்கொள்வது தவறானது. உற்பத்தி விலை இண்டெக்ஸ் (Producer Price index) வழியே கணக்கிடுதல்தான் சரியாக இருக்கும் என்னும் புள்ளியை இருவருமே முன்வைக்கிறார்கள்.
அண்மையில், ஏசியன் பெயிண்ட்ஸ் மேலான் இயக்குநர் அமித் சிங்ளே ஒரு முக்கியமான அவதானிப்பை முன்வைத்திருந்தார். பெயிண்ட் தொழிலில் தேவை பொதுவாக, பொருளாதார வளர்ச்சியை விட 1.5 அல்லது 1.75 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அண்மைக்காலங்களில், பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என அரசுப் புள்ளிவிவரங்கள் சொன்னாலும்,பெயிண்ட் தொழிலில் தேவை, மிக மந்தமாக உள்ளது. இக்காலத்தில், பொருளாதார வளர்ச்சி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதே புரியவில்லை என்னுமொரு சந்தேகத்தை எழுப்பினார். பின்னர் அவருக்கு அரசுத் தரப்பில் இருந்து பெரும் அழுத்தம் கொடுக்கப்பட, அவர் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என மடைமாற்றம் செய்துவிட்டார்.
2026இல் பீட்டர்ஸன் பன்னாட்டுப் பொருளியல் கழகத்துக்காக எழுதிய கட்டுரையில், அரவிந்த் சுப்ரமணியன், 20 ஆண்டுகள் தவறாகக் கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி அலகு என்னும் தலைப்பில், பொருளாதாரக் கணிப்புகளில் ஏற்பட்ட தவறுகளை மீண்டும் சுட்டியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில், கடந்த 20 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் சீராக 7% வேக வளர்ச்சியை அடைந்துள்ளது என உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிம்பம் தவறானது எனச் சொல்கிறார்.
2005 முதல் 2011 வரையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சி, 1-1.5% வரை குறைவாகக் கணிக்கப்பட்டும், 2012 முதல் 2023 வரையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.5 முதல் 2% வரை உயர்வாகக் கணிக்கப்பட்டும் உள்ளன என்று மேலும் சொல்கிறார்
பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் தேவை என்ன?
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு என்பது நாட்டின் பெரும் பொருளாதாரம் செல்லும் திசை, வேகம் இவற்றின் அடையாளமாகும். பொருளாதாரத்தின் பல்வேறு அங்கங்களின் பொருளியல் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஒன்றிணைத்து இந்த ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி கணிக்கப்படுகிறது.
பல்வேறு அங்கங்களின் வளர்ச்சி வேகங்கள், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் என்பவற்றின் அடிப்படையில்தான் வருங்காலத்துக்கான பொதுநலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 1990 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில், வேளாண்மையின் வளர்ச்சி வேகம் 2% ஆக இருந்தது.
2004 ஆம் ஆண்டு தொடங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வேளாண்மை வளர்ச்சி வேகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் (4%) என்னும் ஒரு கொள்கை முடிவெடுத்தது. இதன் செயல்திட்டங்களாக, 2 கோடி ஹெக்டேர்களுக்கான பெரும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் தொடங்கப்பட்டன. அரசின் கொள்முதல் விலைகள் அதிகரிக்கப்பட்டன. தோட்டத்துறைப் பயிர்கள் ஊக்குவிக்கப்பட்டன. கிராமப்புறச் சாலைகள் 50 ஆயிரம் கிலோமீட்டர் அளவில் இருந்து 3.89 லட்சம் கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இணைந்து, 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வேளாண்மை 4% வளர்ச்சி வேகத்தை எட்டியது.
எனவே, புள்ளியியல் தரவுகள் மிகவும் சரியாக சேகரிக்கப்பட்டு, கணிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
எடுத்துக்காட்டாக, அரவிந்த் சுப்ரமணியன் சொன்னது போல, உண்மையான பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக இருந்தால், நமது பொதுநலத் திட்ட அணுகுமுறையும், முதலீடுகளும் வேறு அலகிலும், வளர்ச்சி 7% ஆக இருந்தால், வேறு அலகிலும் இருக்கும். தவறான கணிப்பு பலவகைகளிலும் நாட்டின் பொதுநலத் திட்டங்களை வழிதவறிப் போகச் செய்துவிடும். இது மிகவும் ஆபத்தான ஒரு நகர்வு.
ஒரு முதியவர் மருத்துவமனைக்கு வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவரது உடல்நலச் சோதனைகளின் முடிவு துல்லியமாக இருந்தால்தானே மருத்துவர் முறையாகத் தேவைப்படும் வைத்தியத்தையும் வழிகாட்டுதலையும் செய்ய முடியும்? இல்லையெனில், அது ஆபத்தில் அல்லவா முடியும்?


