தூக்கம் ஒரு வரம்
இந்தியாவில் 60% பேர் தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர்

காதல், அன்பு, அறம், கருணை போன்ற பலதரப்பட்ட வாழ்வியல் பண்புகளை நம் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள் எந்த அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தி இருக்கின்றனவோ அதே அளவுக்கு தூக்கம் குறித்தும் அழகாகவும் ஆழமாகவும் பேசியிருக்கின்றன.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள் -339).
தூக்கத்திலிருந்து விழிப்பது மறுபிறப்பு போன்றது என்கிறார் திருவள்ளுவர். தூக்கத்தின் ஆழமும் அவசியமும் இக்குறளில் உணர்த்தப்படுகிறது.
இப்படித் தமிழ் இலக்கியங்கள் பலவும் தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பேசியிருக்கின்றன.
இலக்கிய வடிவங்களில் மட்டுமல்லாது அறிவியல் ஆய்வுகளிலும் தூக்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உணவுக்கு அடுத்தபடியாக, ஆரோக்கியத்துக்கு அடிப்படை தூக்கம் என்பதை அவை பெரிதும் வலியுறுத்துகின்றன.
ஆனால், இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தூக்கம் தொடர்பான உணர்வு குறைந்துவருகிறது என்பதே எதார்த்தம். அதிலும் கொரோனாவுக்குப் பிறகான வாழ்க்கை முறைகளில் தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்துவருகிறது என்கிறது கள நிலவரம். இப்படித் தொலைந்துபோன தூக்கம் குறித்து முதியோர் அச்சப்படுவதுபோல் இன்றைய இளைய தலைமுறையும் நாகரிக சமூகமும் அக்கறைகொள்வதில்லை; இவர்கள் தூக்கத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இல்லாவிட்டால், ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க வேண்டிய நள்ளிரவில் பிரியாணி சாப்பிட கடை கடையாய் அலையுமா இந்தச் சமூகம்?
ஓட்டக் களமாக வாழ்க்கை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம் என்கிறது நவீன மருத்துவம். இன்றைய சூழலில், அரக்கப்பரக்க அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வதில் தொடங்கி இரவில் படுக்கையில் சாயும்வரை ஓய்வில்லாத ஓட்டக் களமாக உள்ளது வாழ்க்கை. இதில் தூக்கம் ஐந்து மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களில் அநேகருக்கு அலுவலக வேலை காரணமாக, இரவில் வர வேண்டிய தூக்கம், நள்ளிரவு தாண்டி இளங்காலைக்குத் தள்ளிப்போகிறது. அத்தோடு கைபேசி பார்ப்பது, தொலைக்காட்சி பார்ப்பது எனப் பல வழிகளில் இப்போது இரவுத் தூக்கம் தொலைகிறது.
சுருக்கமாகச் சொன்னால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் படுக்கையில் முடங்கி இருக்கும் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் தூக்கப் பிரச்சினை பரவலாகிவருகிறது. புள்ளிவிவரப்படி சொன்னால், இந்தியாவில் 60% பேர் தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர். இரவில் 9–10 மணிக்குள் தூங்கச் செல்வது நல்லது என்பது பொதுவான கருத்து. ஆனால், 58% பேர் இரவு 11 மணிக்கும் மேல்தான் தூங்கச் செல்கிறார்கள். இரவில் நெடுநேரம் சமூக ஊடகங்களில் மேய்வதால் 51% பேருக்கு தூக்கம் தொலைகிறது. பணிச்சுமை காரணமாக 33% பேருக்கு தூக்கம் குறைகிறது. தூக்கச் சூழல் சரியில்லாத காரணத்தால் 33% பேருக்கு தூக்கம் குறைகிறது. பெண்களுக்குத்தான் தூக்கமின்மை பாதிப்பு அதிகம். 49% பெண்கள் 6 – 8 மணி நேரம் தூங்குகிறார்கள். 44% பெண்கள் 4 - 6 மணி நேரம் தூங்குகிறார்கள். 4% பெண்கள் 4 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். 25% பேர் தூக்கமின்மையை மாற்று வழிகளில் சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
தூக்கமின்மை எனும் நோய்
உலகச் சுகாதார நிறுவனம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் ஆகிய நான்கு நோய்களை மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கிற தொற்றா நோய்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வைத்திருக்கிறது. விரைவிலேயே ‘சரியான தூக்கம் இல்லை’ என்னும் பிரச்சினையும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துவிடும். அப்போது மனித ஆயுளைக் குறைக்கிற பிரச்சினையாக தூக்கப் பிரச்சினை மாறிவிடும். அதற்குள் நாம் உஷாராகிவிட வேண்டும். அதற்குத்தான் இந்தத் தொடர்.
“தூக்கம் என்றால் என்ன?”.
“தூக்கம் ஏன் தேவை?, எவ்வளவு தேவை?”.
“வயதான காலத்தில் தூக்கம் குறைவது ஏன்?”.
“தூக்கம் குறைந்தால் உடலுக்குள் என்னவெல்லாம் நிகழும்?”
“தூக்கச் சுகாதாரம் என்றால் என்ன?”
“தூக்கத்தில் கனவுகள் வருவது ஏன்?”
“தூக்கத்தில் குறட்டை விடுவது ஏன்?”
“தூக்கம் குறைந்தால் தூக்க மாத்திரை சாப்பிடலாமா?”
“பகலில் குட்டித் தூக்கம் போடலாமா?”
“இரவு நேரப் பணியாளருக்குத் தூக்கம் குறைந்தால் எப்படி ஈடுகட்டுவது?”
“தூக்கத்தில் நடப்பது ஒரு நோயா?”
“தூக்கத்துக்கும் உடற்பயிற்சிக்கும் தொடர்பு உண்டா?”“
”இளைய வயதினருக்கு இதயம் பாதிக்கப்படுவதற்குத் தூக்கம் ஒரு காரணமா?”
“சரியான தூக்கத்துக்கு என்ன வழி?”
இப்படி முக்கியமான பல கேள்விகளுக்கு அறிவியல் முறைப்படி பதில் சொல்வதே இத்தொடரின் பணி.
தொடர்ந்து பயணிப்போம், வாருங்கள்.
(தூக்கத்தை வரவேற்போம்)


